Sunday, April 22, 2007

தமிழ்மணத்தின் கண்ணீர்த்துளிகள்

மனிதத்தின் வளர்ச்சிக்கு ஆதார காரணங்கள் பல. பேசத் தெரிந்தது ஆதி காரணங்களில் ஒன்று. பேசத் தெரிந்தவுடன் கருத்து பரிமாறலும் நடந்தது. பிடிக்காத கருத்தை அதே மனித இனம் புரளி என்று நினைத்து அஞ்சவும் செய்தது.

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தைத் தூண்டிய புரளியிலிருந்து, கெண்டகி ஃபௌண்டேஷன் சிக்கனை எதிர்த்து பரப்பப்படும் புரளிகள்வரை புரளிகள் எத்தனையோ வகை. ஆனால் புரளிகளுக்கு நம்பகத்தன்மை அளிப்பது எது என்பதுதான் சுவாரஸ்யமானது.

புரளிகளை எப்படி எதிர்கொள்ளுகிறார்கள் என்பதுதான் புரளியின் நம்பகத்தன்மையை நிர்ணையிக்கின்றது.

உதாரணமாக FUCK என்கின்ற உலகப்புகழ்பெற்ற வார்த்தையின் தோற்றம் பற்றிய புரளி.

காமம் கடவுளுக்கு எதிரானது, அதுவே முதல் பாவம் என்று சொல்லி ஆட்சியில் பலமுள்ளவர்களாய் பலர் இருந்தனர். அவர்கள் இக்கொள்கையின் புனிதத்தில் அதீத நம்பிக்கை கொண்டு, கேள்வி கேட்பவர்களை கடவுளுக்கு எதிரானவர்கள் என்றோ, அல்லது அவர்களது கொள்கையை எதிர்க்க வந்த கோடாலிக் காம்புகளாகவோ கொன்று குவித்த காலத்தில் இந்த கெட்ட(?)வார்த்தை தோன்றியதாகக் கதை.

இத்தகைய சூழலில் குடும்ப வாழ்வில் ஈடுபடுபவர்கள் Fornication Under the Consent of King என தங்களின் வீட்டில் தொங்க விட்டிருப்பார்கள் என்றும், இதன் சுருக்கமே FUCK என்கின்றது அப்புரளி.

இந்தப் புரளியை பரப்பியவர்களை அக்கால அரசர்கள் உலகைவிட்டு வெளியேற்ற 24 மணிநேரத்திற்குள் செயல்படுத்த வேண்டிய கட்டளை ஏதும் பிறப்பித்திருக்கிறார்களா என்று ஆராய்ந்தால், அதுபோல எதுவும் தென்படவில்லை. இது இதுபோன்ற புரளிகளைக் கண்டு பயப்படவேண்டிய சூழல் ஆள்பவருக்கு இல்லை என்பதையும், அவர்களுக்கு தங்களது கொள்கையின் நேர்மை குறித்து இருந்த தெளிவையும் விளக்குகின்றது. சில கருத்து தெரிவித்தல்களைக்கூட திட்டமிட்டு பரப்பப்படும் புரளி என்று அவர்கள் நினைக்காதிருந்தது அவர்கள் தங்களின் பிழைப்பை குறித்து பயமற்றவர்களாய் இருந்தார்கள் என்பதைக் காட்டுகின்றது.

இது போன்ற எதிர்கொள்ளல்கள் புரளிகளை புரளிகளாகவும், கருத்துத் தெரிவித்தலை கருத்துத் தெரிவித்தலாகவும் வைத்துள்ளன. புரிதலின் அடிப்படையில் வாழ்வை நடத்தினர் அவர் என்பதை புரியவைக்கும் எதிர்வினைகள் இவை.

அமைப்புக்கள் நேர்மையாக புரளிகளை எதிர்கொள்ளும்போது புரளி வலு இழக்கிறது. ஆனால், எப்போதெல்லாம் ஒரு எதிரான கருத்தை திட்டமிட்ட புரளி என்று பட்டம் கொடுத்து அதை எதேச்சதிகாரமுறையில் எதிர்க்கிறார்களோ, அப்போது அந்தப் புரளியில் புரளியைவிட புகையும் உண்மை அதிகம் என்பது தெரிகின்றது.

தமிழ்மணத்தின் தற்கால செயல்கள் அப்படித்தான் இருக்கின்றன. நேசக்குமார் கேட்டதெல்லாம் அவர்களைப்பற்றி புரளி இருக்கின்றது என்பதுதான். உடனேயே சைபீரிய பாலைவனத்திற்கு மனிதத்தையும், மனித வளத்தையும் அனுப்பும் வசதியை தேடுபவர்களைப்போலத் தமிழ்மணம் அவரை தனது திரட்டியிலிருந்து மிரட்டி வெளியேற்றியது. அவர்களது நோக்கம் இதுபோல ஒருவரை விரட்டினால் மற்றவர்கள் பயந்துபோய் எதேச்சதிகாரத்துக்கு பணிந்துபோய் விடுவர் என்பதுதானா?

நேசக்குமார் சொல்லியதெல்லாம் தமிழ்மணம் பதிவர்களின் ஐபிக்களை விரும்பத்தகாதவர்களுக்குக் கொடுத்திருக்கும் என்றும் சிலர் சொல்லிவருகிறார்கள் என்பதே. இந்த ஸந்தேகத்தில் ஏதேனும் ஆதாரம் இருக்குமா என்று தமிழ்மணத்தை காணுகையில் தமிழ்மணமே பின்வருமாறு சொல்லுகிறது:

எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.

இதுவரை தமிழ்மணத்தின் க்ளிஷேவான "தார்மீக நிலைப்பாடு" என்ன என்ற கேள்விக்கு விடையில்லை.

அவர்களது விதிமுறைகளை ஏற்றுக்கொள்பவர்களுக்கு தாமாகவே தருவோம் என்கின்றது.

இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலையை எடுக்கவேண்டும், மனித சுதந்திரத்தை இந்தியருக்கு தரக்கூடாது என்பதுதான் இந்த விதிமுறையா?

கேட்டவர்களையெல்லாம் தமிழ்மணம் விலக்கி வருகின்றது.

ஏனெனில் இந்த "தார்மீக நிலைப்பாட்டின்" அடிப்படையில்தான் பதிவர்களின் மன நிம்மதி இருக்கிறது. அவர்களது குடும்ப நலம் இருக்கிறது. அவர்களுக்கு சமுதாயத்தால் ஏளனம் ஏற்படுமா என்கின்ற பயம் தெளிதல் இருக்கிறது.

ஆனால், தமிழ்மணம் கேள்விகளை எதிர்கொள்ளும்விதம் இந்த குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்குமோ என்கின்ற பயத்தை ஏற்படுத்துகின்றது.

தமிழ்மணத்தால் இதுவரை இந்த பிரச்சினையினால் விலக்கப்பட்டவர்களாக இருப்பவர்களில் பின்வருவோர் உள்ளனர்:

1. நேசக்குமார்

2. அரவிந்தன் நீலகண்டன்

3. கால்கரி சிவா

இந்த கண்ணீர்த்துளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. தமிழ்மணமும் அழுதுகொண்டே இருக்கத் தயாராக உள்ளது. அழுகை மட்டுமே இருக்கும் சூழல் மரண வீட்டில் இருப்பது. எப்போதும் மனிதத்தை எதிர்த்து செய்யப்படும் ஒப்பாரிகளும், ஊளைகளும் காதை அடைக்கின்றன. இந்த சூழ்நிலையில் மனித வளத்தை பேசுபவர்களால் இருக்க முடியாது. மனிதவளத்தையும், பகுத்தறிவையும், இயற்கையின் இயல்பை புரிந்துகொள்ளும் ஆன்மீகத்தையும் பற்றிய கவலையில்லாத மனிதனாக வாழவேண்டிய கட்டாயம் ம்யூஸுக்கு இல்லை.

ஊண் உறக்கம் இன்றி தமிழ்மண நிர்வாகத்தார் உழைக்கின்றனர் என்பதில் எனக்கு எள்ளளவும் ஸந்தேகமில்லை - இந்த உழைப்பின் நோக்கம் வேறும் ஒப்பாரிதான் என்பதிலும், மனிதத்தின் உயிர்மையை எதிர்க்கும் கொள்கையை ஆதரித்து, பிணம் தின்னும் சாத்திரங்களை ஆதரிப்பதுதான் என்பதையும் அவர்களது இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.

இந்தச் சூழ்நிலையிலும் தமிழ்மணத்தை எதிர்த்து தமிழ்மனத்தார்களால் கேட்கப்பட்டுவரும் கேள்விகளில் ஒன்று பதிவர்களின் ஐபியை தமிழ்மணம் தகாதவர்களுக்கு தருகிறார்களா என்பது. இந்த குற்றச்சாட்டு எழும் இவ்வேளையிலே பல பதிவர்கள் மிரட்டப்பட்டும், அவர்களது குடும்பத்தார் பற்றி தகாத கருத்துக்களை இணையம் முழுதும் பரப்பப்பட்டும், வீட்டிற்கு மிரட்டல் தொலைபேசி செய்யப்பட்டும் வருவது கவலை அளிக்கிறது.

இப்படியெல்லாம் செய்ய வாய்ப்பு இருக்கின்றதா என்று தெரியாததால் தமிழ்மணத்தின் சட்டதிட்டங்களைச் சென்று ம்யூஸ் பார்த்தபோது, பின்வருமாறு இருக்கின்றது.

Each time a visitor comes to thamizmanam.com site, we collect the visitor's domain name/IP Address, referral data and browser/platform type. thamizmanam.com also counts, tracks, and aggregates the visitor's activity into our analysis of general traffic flow. thamizmanam.com aggregates this information to determine trends, preferences, reading patterns, and demographics of the user community in general. Occasionally we may provide this aggregate data to the sponsors and business partners. Specific information such as name, IP address, email address, or other contact information will *never be shared with anyone* unless ordered by a court of law.

தடிமனாக்கப்பட்ட வாக்கியம் கவலை தருகின்றது.

தமிழ்மணத்தின் சட்டதிட்டங்களைப் படித்துவிட்டுத்தான் எல்லா பதிவர்களும் தங்களுடைய பதிவை அதில் இணைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
தமிழ்மணத்திற்கு பதிபவர்களுடைய, பின்னூட்டமிடுபவர்களுடைய தகவல்களை தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு வழங்க இந்தச் சட்டம் வழிவகுக்கின்றது.

தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை தங்களுடைய பதிவுகளில் வைத்திருக்கும் பதிவர்களும், அப்பதிவுகளில் பின்னூட்டமிடுபவர்களும் அவர்களுடைய சொந்தத் தகவல்கள் பத்திரமாக இருக்கும் என்று நம்பமுடியாது.
ஆனால், தமிழ்மணம் தன்னுடைய சட்டங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் இந்த விஷயத்தில் பாதுகாப்பாகவே இருக்கிறது.

(ம்யூஸினுடைய இந்தப் பதிவில் இருந்து கருவிப்பட்டை விலக்கப்படவில்லை. காரணம், இதுவே வலைப்பதிவுகளில் ம்யூஸினுடைய கடைசிப்பதிவு. ம்யூஸ் இனி பின்னூட்டமிடப்போவதுமில்லை.)

தமிழ்மணம் அவர்களுக்குத் தேவையானவர்களிடம் தகவல்கள் தரும் வாய்ப்பிருக்கும்போது, மற்றவர்கள் - அது அரசாங்கமாகவே இருந்தாலும் சட்டத்தின் மூலமாய் மட்டுமே தமிழ்மணத்திடமிருந்து இந்தத் தகவல்களைப் பெறமுடியும். அதாவது தமிழ்மணத்தை சட்டரீதியாக மட்டுமே பதிவர்கள் அணுக முடியும். இங்கனம் சட்டரீதியாக தமிழ்மணத்தை அணுக பதிவர்கள் பலருக்கு பணபலமோ, நேரமோ இல்லை. அங்கனம் சட்டரீதியாக அணுகினாலும் பதிவர்கள் வெற்றிபெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.
தமிழ்மணம் தன்னுடைய சேவையை பல்வேறு சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளின் பின்னரே ஆரம்பித்துள்ளது. ஆனால், எந்தப் பதிவரும் சட்டபூர்வமான ஆலோசனைகளுக்குப் பின்னரே தமிழ்மணத்தில் இணைகிறார் என்று சொல்லமுடியாது.

மேலும் தமிழ்மணம் என்பது ஒரு அமைப்பு. அதனுடைய அதிகாரபூர்வ பதிவுகளின் போக்கு தமிழ்மணத்திற்கு இருக்கும் மிகப்பெரிய அரசியல் பின்புலத்தையும், பலமுள்ளவர்களின் ஆதரவையும் காட்டுகின்றது. தனிமனிதர்களாகிய பதிவர்களால் அதை எதிர்க்கமுடியாது.
இங்கனம் எதிர்ப்பவர்களைப் பற்றிய தகவல்களை வேறு யாரேனும் நபர்கள் பயன்படுத்தி பதிவர்களை கீழ்மைப்படுத்தவோ மிரட்டவோ முடியும். பதிவர்களுடைய அலுவலகங்களுக்கு அவர்கள் பதிவதுபற்றிய புகார்கள் செல்லுவது அதிகமாகியுள்ளதும் இங்கு நோக்கவேண்டியது.
பெண் பதிவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஆபாச மின்னஞ்சல்களும், தொலைபேசிகளும் வருகின்றன. இந்தத் தகவல்களைத் தரக்கூடிய பலம் தமிழ்மணத்திற்கு இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், யாராலும் தமிழ்மணம்தான் செய்தது என்று நிறுவமுடியாது. அரசாங்கத்தாலும்கூட அது முடியாது.

இவற்றின்மூலம் தமிழ்மணம் கடவுள் நிலையை எட்டியுள்ளது. அதனால் நன்மை மட்டுமே விளையும் என்று அதில் இணைந்துள்ள பதிவர்கள் நம்பித்தானாகவேண்டும். பதிவர்களுக்கு தீமை ஏற்படுமாயின் புயல், வெள்ளம், சுனாமி போல கடவுளின் கோபம் என்று நினைத்து ஏற்பட்ட காவுகளை புதைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

தமிழ்மணம் தன்னுடைய திரட்டியிலிருந்து ஒரு பதிவரை விலக்குமாயின் விலக்கியதற்கான காரணங்களை அவருக்கு தெளிவான ஆதாரங்களோடு அளிப்பதில்லை என்பதும் தெரியவருகின்றது.

தமிழ்மணத்தின் தயவிலேயே பதிவர்கள் பிழைப்பும் பாதுகாப்பும் இருக்கின்றது. இதே காலகட்டத்தில் தமிழ்மணத்தில் இணையாத பதிவர்களுக்கு நிம்மதி இருக்கின்றது.

அவர்களுக்கு ஆபாச மெயில்கள் அதிகம் வருவதில்லை, மிரட்டல் தொலைபேசிகள் வருவதில்லை.

அவர்களுடைய பதிவுகளுக்கும் பின்னூட்டமிடுபவர்களும் எண்ணிக்கையில் அதிகமாய் இருக்கிறார்கள். அவர்களும் பாதுகாப்பாய் இருக்கிறார்கள்.
தன்னுடைய காப்பாளர்களுக்கு தமிழ்மணம் கட்டுப்பட்டுள்ளது என்று அதன் சட்டம் சொல்லுகின்றது. ஆனால், காப்பாளர்கள் அல்லாத பதிவர்கள் பயனாளிகள்மட்டும்தானா? மற்ற பதிவர்களால் அல்லவா தமிழ்மணம் வாழ்கின்றது? என்பதுபோன்ற கேள்விகளை பதிவர்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்மணம் உண்மையிலேயே இதுபோன்ற தகவல்களைத் தவறான நபர்களுக்குத் தராவிட்டாலும் பதிவர்களால் அதை நம்புவது கடினமாகத்தான் இருக்கும். பலமுள்ளவர்களை யாரும் எப்போதும் நம்புவதில்லை.

Saturday, April 21, 2007

ஆறு: கோவி கண்ணனுக்காக

கோவி கண்ணன் ஆறு பற்றி எழுத வேண்டுகோள் விடுத்தபோது ஒத்துக்கொண்டேன். அது எழுதிவிட்டே வேறு பதிவுகள் என்று சொல்லியிருந்தேன்.

கல் கண்டபோது நாய் காணவில்லை. நாய் கண்டபோது கல் காணவில்லை. அதனால், இதுவரை எழுதவில்லை.

ஓடிவிட்ட காலத்தில் காத்துக்கொள்ள முடிந்ததெல்லாம் வேறு பதிவுகள் எழுத முடியாத நிலைதான். அது ப்ளாக்கர் உலகில் இருந்து இந்த ம்யூஸ் விலகுவது என்கிற முடிவுவரை நீடிக்கிறது.

பதிவுகளிலிருந்தே விலகுவது என முடிவு செய்துவிட்டு அதற்கான காரணங்களையும், அந்த முடிவையும் அறிவிக்கும் பதிவை வெளியிடப் போகிறேன். அது அடுத்த பதிவு. கடைசி பதிவு.

அதை வெளியிடும் முன்பாகவாவது என் உறுதிமொழியை நிறைவேற்ற இந்தப் பதிவு: குறைந்த பக்ஷம் தலைப்பிலாவது ஆறு.


நடந்துவருகின்ற விஷயங்களைப் பார்க்கும்போது தலைப்பில் மட்டும்தான் பதிவர்களின் வேதனை ஆற முடியும் போலிருக்கிறது.

ம்யூஸின் மனமே, விலகி ஆறு.